சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், மருத்துவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு
தடுப்பூசியை கண்டு தொடக்கத்தில் மக்கள் அச்சம் கொண்டனர். ஆனால் தற்போது, மிகுந்த ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர். அதிக மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதால், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளிடமிருந்தும், வெளி மாநிலங்களிடமிருந்தும் தடுப்பூசியினை வரவழைப்பதற்காக, மத்திய அரசிடம் கோரிக்கையை வைத்துள்ளது.
மத்திய அரசிடம் கோரிக்கை
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் முந்தியடித்துச் செல்கின்றனர்.
தடுப்பூசி சரிவர கிடைக்கவில்லை என்பதால் பலர் மருத்துவமனை நிற்வாகத்திடமும், காவல் துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனைப் போக்கும் பொருட்டு, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
வந்தடைந்த தடுப்பூசிகள்
அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில் தடுப்பு முகாம்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 22 பார்சல்களில், இரண்டு லட்சத்து 64 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.
இவற்றை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்!