சென்னை: வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
13 மீட்புக்குழுக்கள்
இந்நிலையில், சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், வடகிழக்குப்பருவ மழையால் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், அவசர அழைப்பிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு சென்று உதவிகள் செய்ய வசதியாக 13 காவலர் பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உதவி ஆய்வாளர் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் அனுபவமுள்ள 10 காவலர்கள் உள்ளனர்.
சங்கர் ஜிவால் ஆய்வு
12 மாவட்டங்களுக்கு ஒரு சிறப்புக் காவலர் பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மீட்புக் குழுவினர் சென்னை ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறை பேரிடர் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பார்வையிட்டு, மீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: தாம்பரம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் அவதி