சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றவும் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ஜே.சி.பி., டாடா ஏஸ் வாகனம் மற்றும் பணியாளர்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றி வருகிறது.
அதனடிப்படையில், மாநகராட்சி அலுவலர்களால் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையாக கடந்த மூன்று வாரங்களில் மாநகராட்சி மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் 446 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 1,135 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 1,581 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 274 ஆக்கிரமிப்புகளும் திரு.வி.க. நகரில் 222 ஆக்கிரமிப்புகளும் அடையாறில் 221 ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் எனவும்; அவ்வாறு அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.