தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அழகிரி கிறிஸ்துமஸ் கேக்கினை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தார்.
அதன்பின் சஞ்சய் தத் பேசுகையில், ' இந்திய அரசியலமைப்பைச் சீர்குலைவுகளுக்கு உள்ளாக்குகிறது மத்திய அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என சோனியா காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். எனவே, மக்களுடன் சேர்ந்து சட்ட விரோதமாக நடந்துகொள்ளும் மத்திய அரசை எதிர்க்க வேண்டும். சமூக நல்லிணக்கம், சகோதரத்துவத்திற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் ' என்றார்.
தொடர்ந்து எஸ்.ரா.சற்குணம் பேசுகையில், ' காங்கிரஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறது. பின்னர் திமுக கொண்டாட உள்ளது. ஆனால், பாஜக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியுமா..? இந்தியாவில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது. அமாவாசை இங்கு இருக்கலாம். ஆனால், அப்துல்காதர் என்றால் இங்கு இருக்க முடியாதாம்..! அனைவரையும் கொண்டுசென்று எல்லையில் விடுவோம் என்றால் முடியுமா... இஸ்லாமியர்களுக்கு வாக்குகள் இல்லாமல் செய்ய பாஜக முயல்கிறது. மோடியும், அமித் ஷாவும் குஜராத்தில் இருந்த இடமே தெரியாமல் இருந்தனர். நாட்டில் வாக்குக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, அனைத்து வாக்கையும் கள்ள வாக்காக போட்டு மந்திரிகள் ஆகியுள்ளனர்.
அனைவரும் கூட்டு சேர்ந்து அத்தனை வாக்குகளும் பாஜகவுக்கு விழும்படி செய்து விட்டனர். இனிவரும் தேர்தலில் அனைத்துத் தலைவர்களும், நாட்டின் தலைவிதியை மாற்ற காங்கிரஸ் ஆட்சி மலர பாடுபடுங்கள். கிறிஸ்துமஸ் தாத்தாவை காங்கிரஸ் தலைவருக்கு கொடுக்கிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா அனைத்தையும் கொண்டு வருவார். ஆனால், வாக்குக் கேட்டால் தர மாட்டார்' என்றார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், ' நாடு பற்றி எரியக் காரணம் மத வெறியர்கள் தான். மனிதர்களுக்கு மறு பிறவி இல்லை. ஆனால், இயேசு மட்டுமே மறு பிறவி எடுத்தார். நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் பாடுபட்டது. இன்றையச் சூழலில் நாடு என்ன ஆகும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி பேசுகையில், ' கிருஷ்ண பகவானுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்றனர். இயலாத ஒன்று என்றாலும் ரசனையான கற்பனை என்பதால் காங்கிரஸ் அதனை ஏற்கிறது. மதம் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை ஏற்கும். ஆனால் ஆன்மிகம் அவ்வாறு ஏற்காது. ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்தார். அதேபோல் தான் முசோலினி இத்தாலியில் செய்தார். அதனை இந்தியாவில் செய்வதற்கு தான் மோடி இறங்கியுள்ளார். அமெரிக்காவின் 99% மக்கள் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். உலகம் முழுவதும் உள்ள மக்களின் திறமைகளை பயன்படுத்தியதால் தான் அமெரிக்கா வல்லரசு ஆகியுள்ளது.
இந்தியாவும் அப்படித்தான் இருந்தது. ஆனால், இது சத்திரமா என்று கேட்கிறார் மோடி. ஏவுகணையை உருவாக்கிய கலாமும் இந்தியர் அல்ல... என்பதைத் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்கிறது.
மனித இனம் இடம் விட்டு இடம் நகர்வது தான் யதார்த்தம். ஆரியர்கள் இந்தியாவில் வந்து பொருட்கள், கல்வி அறிவினை வழங்கினார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவன் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்தவனைப் பார்த்து, நீ இந்தியனா இல்லையா எனக் கேட்டால் அது கேவலம் அல்லவா..!' என்றார்
தொடர்ந்து அவர் பேசுகையில், ' 2020ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பின் வருபவர்களுக்கு குடியுரிமை இல்லை என்றுகூட சொல்லியிருக்கலாம்.
ஆனால் 50 ஆண்டுகளாக இருப்பவர்களையும் அப்படி கேட்டால் என்ன செய்வது? அப்படியென்றால், இந்தியக் குடியரசுத் தலைவரும் கூட, இந்தியராக இருக்க முடியாது. போராட்டங்களில் உடை அணிந்தவர்களைப் பார்த்து அவர்கள் இந்தியர்கள் போல் தெரியவில்லை என்கிறார் மோடி. இந்தியர்களின் நாகரிகம் விருந்தோம்பல். ஆனால், வந்தவர்களை விரட்ட பார்க்கிறார் மோடி. காங்கிரஸ் சிறுபான்மையினரை மட்டுமல்லாமல் அனைவரையும் நேசியுங்கள். மனிதாபிமான முறையில் அணுகுங்கள் என்கிறது. தற்போது இந்தியா மோசமான நிலையில் உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கூட சீர்படுத்த முடியும். ஆனால், மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். பாஜகவிற்கு எதிராக ஒட்டுமொத்த மாணவர்களும் போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் வலுப்பெறக் கூடாது என்று கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் போராட்டம் அதிகரித்தால் மோடி கோபப்படுவார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும். சாதி, மதம், இனம், மொழி, நிறம் உள்ளிட்டவைகளை வைத்து மனிதர்களைப் பிளவு படுத்தலாம் ஆனால், ஒன்றிணைப்பது சிரமம். காங்கிரஸ் ஒரு காலத்திலும் மனிதர்களைப் பிரிக்காது. அதே சமயத்தில் காங்கிரஸ் எதையும் எதிர்கொள்ளும்' என்றார்.
இதையும் படிங்க: