குற்ற வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் முடித்து வைக்கப்பட்ட எப்ஐஆர்-களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தலைமை பதிவாளர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி இது போன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைத்தது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி க்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தமிழக டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல் ஆணையர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7,324 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக உரிய விதிகளை வகுப்பது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்களிடம் இருந்தும், மண்டல ஐ ஜிக்களிடம் இருந்தும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
![1](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2368548_thampnail_3x2.jpg)
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
குறித்த காலத்திற்குள் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும், விசாரணையை கண்காணிப்பதற்கும், உதவி ஆணையர் அல்லது துணை காவல் கண்காணிப்பாளர் ரேங்க் அதிகாரிகளை நியமிக்கும்படி, அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 603 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள டிஜிபி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் தேதியை குறிப்பிடுவதற்கு என்று விசாரணை நீதிமன்றங்களில் தனி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் டிஜிபி யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எம்.வி.முரளீரதன் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.