சென்னை அரசு ஒமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதற்காக கரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம் செயல்பட்டுவருகிறது.
இதன்மூலம் கரோனா பாதிக்கப்பட்ட 200-க்கு மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து மீண்டாலும், அதற்குப் பின் பல்வேறு வகையில் உடல்நலப் பிரச்னைகளில் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் தானியங்கி உடல் பருமன் அளவிடுதல், நுரையீரல் பாதிப்புகளைக் கண்டறிய மூச்சு திறனாய்வு, ரத்தத்தில் ஆக்சிஜன் கண்டறிதல், பிசியோதெரபி பயிற்சி, கரோனவால் ஏற்பட்ட இதய பாதிப்புகளைக் கண்டறிய சைக்கிள் பயிற்சி, படிக்கட்டு பயிற்சி திறன், ஈசிஜி போன்றவையும் எடுக்கப்படுகிறது.
மேலும், கண்பரிசோதனை, மனநல ஆலோசனை, நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கான உரிய சிகிச்சை மருந்துகள், யோகா, இயற்கை வாழ்வியல் முறையில் சிகிச்சை வழங்கப்படுகின்றது.
இதனால் அவர்கள் பாதிப்பிலிருந்து மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குச் செல்ல முடிகிறது. ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு மீண்டும் சிடி பரிசோதனை செய்ததில் நுரையீரல் பாதிப்படைந்த 98 விழுக்காடு நோயாளிகள் முற்றிலுமாக நுரையீரல் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.