செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பூதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராம்தேவ் என்பவர் பூஜா அடகு கடையை நடத்தி வந்தார். இவர் கிராம மக்களிடம் தீபாவளி சீட்டு போடும்படி விளம்பரம் செய்துள்ளார். அதை நம்பி அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்து 300 பேர் ஆயிரம் ரூபாய் வீதம் தீபாவளி சீட்டுக்கான பணத்தை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் இரண்டு கோடி ரூபாய்வரை பணம் சேர்ந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையறிந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆகவே பூதூர் கிராமத்தில் இரண்டு அரசுப் பேருந்துகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது, மூவர் தப்பி ஓட்டம்