கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வை ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முன்னதாக கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.
இதையடுத்து, இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர். இந்தக் கோரிக்கைகளை ஏற்காத டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
இதனை எதிர்த்து விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
டிஎன்எஸ்சியின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்றும் இது தொடர்பாக ஜூன் 17ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டிஎன்பிஎஸ்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.