இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து பிரிவுகளிலும் அசத்திய இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த இந்திய வீரர் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இதனிடையே இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்குவிப்பில் தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணியை, டீன் எல்கர் - டீ காக் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தால் காப்பாற்றினர். இதனால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 18 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் என 160 ரன்கள் அடித்தார். இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இடதுகை தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டனின் 23 வருட சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
கொல்கத்தாவில் 1996ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் கேரி கிர்ஸ்டன் 133 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 10ஆம் தேதி புனேவில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின்