இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன், மருந்துகள் உள்ளிட்டவைகளால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகளைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 10 லிட்டர் ஆக்ஸிஜன் சேமிப்புத் திறன் கொண்ட இரண்டாயிரம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இரண்டாயிரம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறோம். கரோனா வைரஸுக்கு எதிராக நாம் போராடும் இந்தச் சூழலில் மருத்துவத்துறை மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறது.
முன்களப் போராளிகளான அவர்கள், நம்மைக் காக்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். உடல்நலம், பாதுகாப்புக்கு பிசிசிஐ எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உதவியாக இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிசிசிஐ கடந்த ஆண்டு கரோனா நிவாரண நிதியாக பிரதமரின் பொது நிவாரணத்திற்கு 51 கோடி ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.