2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து - தென் கொரியாவின் சிங் ஜி ஹியூன் ஆகியோர் மோதினர்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் புள்ளிகளைக் கைப்பற்ற கடுமையாகப் போராடினர். முதல் செட் ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலைப் பெற்றார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 49 நிமிடங்கள் வரை நீடித்தது. காலிறுதிப் போட்டியில் சிந்துவை எதிர்த்து ஜப்பானின் ஒகுஹாரா அல்லது டென்மார்க்கின் ஹோஜ்மார்க் மோதவுள்ளனர்.
முன்னதாக நடந்த உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான டென்மார்க்கின் விக்டரை எதிர்த்து இந்தியாவின் லக்ஷ்யா சென் ஆடினார். அதில் 17-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி போனப்பா - சிக்கி ரெட்டி இணை 13-21, 14-21 என்ற கணக்கில் ஜப்பானின் மிசாக்கி - அயாகா இணையிடன் தோல்வியடைந்தது.
மேலும் இந்தியாவின் சாய் ப்ரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் ஏற்கனவே ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மட்டுமே ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!