சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்தியத் திரையுலகின் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதை அறிவித்தார்.
மத்திய அரசின் பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள ரஜினிக்கு இது மற்றுமோர் கௌரவம்.
1975ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரஜினி. தனது விடாமுயற்சியால் திரையுலகில் மிகப் பெரிய இடத்துக்கு உயர்ந்திருக்கிறார். வெள்ளை நிறத்தில் இருப்பதுதான் ஹீரோ மெட்டீரியலுக்கான தகுதி என்ற பிம்பத்தை உடைத்துக்காட்டியவர் ரஜினி.
இந்தப் பையன் பெரிய ஆளா வருவான் பாருனு எஸ்பிபி-யிடம் ரஜினியைக் காட்டி சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். அவர் சொன்னது போலவே ரஜினியும் அசைக்க முடியாத ஆலமரமாக வளர்ந்து நின்றார். தற்போது தனது குருநாதர் பாலசந்தர் பெற்ற உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் வென்றிருக்கிறார்.
![சூப்பர் ஸ்டார் ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11235885_3.jpg)
’பைரவி’ படத்துக்கு முன் குணச்சித்திர வேடம், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரஜினிக்கு அதன்பிறகு கதாநாயக வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கின. மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் ரஜினிக்குள் இருந்த நடிகனை மக்களுக்கு அடையாளம் காட்டியது. ’முள்ளும் மலரும்’ படத்தைப் பார்த்துவிட்டு உன்னை அறிமுகப்படுத்துனதுக்கு பெருமைப்படுறேன் என பாலசந்தர் கூறியிருக்கிறார்.
கருப்பு வெள்ளை, கலர், 3 டி, மோஷன் கேப்சர் என நான்கு விதமான திரைப்பட வடிவங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமை ரஜினியையே சேரும். அடித்தட்டு மக்களின் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து, எளிய மக்களின் நாயகனாக மாறிப்போனார் ரஜினிகாந்த்.
ரஜினி நடித்தால் படம் சூப்பர் ஹிட் என்ற நிலை வந்தது. தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி ஓடத்தொடங்கினர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினியின் பெரும்பான்மையான படங்கள் சூப்பர் ஹிட்.
ஸ்டைலுக்குப் பேர் போன ரஜினிக்குள் சிறந்த நகைச்சுவை நடிகர் ஒளிந்திருப்பதை ‘தில்லு முல்லு’ படம் வெளிப்படுத்தியது. இந்திரன், சந்திரன் கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
![ஆறிலிருந்து அறுபது வரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11235885_6.jpg)
‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தை பார்த்துவிட்டு கண்கலங்காதவர்கள் கிடையாது. அவ்வளவு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரஜினிகாந்த்.
ரஜினியின் ‘பாட்ஷா’ திரைப்படம் ஒரு வருடத்துக்கு மேல் ஓடி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. ஒரே ஒரு ‘பாட்ஷா’-தான் ஊருக்கெல்லாம் என்பதை உண்மையாக்கினார் ரஜினி. அதே ஸ்டைலில் பலரும் நடிக்க முயற்சித்து தோற்றுப்போனார்கள்.
![பாட்ஷா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11235885_11.jpg)
வயசாகியும் இளம் நடிகைகளுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் என விமர்சனம் எழுந்தது. அதற்கு அவரே ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் பதில் சொல்லியிருப்பார். ‘கபாலி’, ‘காலா’ திரைப்படங்களில் டூயட் பாடுவதை நிறுத்திவிட்டார்.
![ரஜினி - ரஞ்சித்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11235885_7.jpg)
’காலா’, ‘கபாலி’ போன்ற சமூகநீதி பேசும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்ததற்காகவே ரஜினியை பாராட்டலாம். இயக்குநர் பா. இரஞ்சித்தின் அரசியல் செயல்பாடுகளுக்கு இந்த இரு படங்களும் பெரிதும் உதவின.
தற்போது சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். உலகத்திலேயே 70 வயதிலும் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் ஒரே நடிகர் ரஜினிதான். படையப்பா படத்தில் அப்பாஸ் சொல்வது போல, அவருக்கு இன்னும் வயசே ஆகல (திரையில்). தாதாசாகேப் பால்கே விருதுக்கு அவர் தகுதியானவர்தான், யுனிவர்சல் சூப்பர் ஸ்டாரின் பயணம் தொடரட்டும்.
இதையும் படிங்க: #Rajinism: உங்களுக்கு வயசே ஆகல! What a man!