2019ஆம் ஆண்டு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது இயக்குநர் ப்ரியா கிருஷ்ணன் இயக்கிய பாரம் திரைப்படம். இது வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 'காக்கா முட்டை', 'விசாரணை' படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் வெற்றிமாறன் , மிஷ்கின், ராம், அஜயன் பாலா, கமலக் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இதில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், நாம் எடுக்க நினைக்கும் படத்தை ஒரு பெண் எடுத்துள்ளார் என ராம் என்னிடம் கூறியிருந்தார். ப்ரியாவை பார்த்தவுடன் இந்தப் பெண்ணுக்கு படமே எடுக்கத் தெரியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
'பாரம்' படத்தைப் பார்த்த பிறகு எனக்கு செருப்பால் அடித்ததைப் போன்று இருந்தது. நாமெல்லாம் எடுப்பது படமா என்று தோன்றியது.20 ஆண்டுகளாக சினிமா என்னை என் பெற்றோரிடமிருந்து பிரித்துவிட்டது. இந்தப் படம் பார்த்த பிறகு அம்மா அப்பாவை பார்க்க வேண்டுமென்று தோன்றியது.
100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த முதல் 3 படங்களுக்குள் ஒன்றாக இப்படம் இருக்கும். 'பேரன்பு', 'அசுரன்', 'சைக்கோ' படங்களை சேர்த்துப் பார்த்தாலும் கூட ’பாரம்’ படத்திற்கு சமமாகாது. இந்தப் படத்திற்காக குறைந்தது 20 இடங்களிலாவது போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன் என்றார்.