தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்த இத்திரைப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப்படைத்துள்ளது.
இதனிடையே விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் தமிழ்நாடு காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வசிக்கும் வீடு, இசிஆர் அருகே அமைந்துள்ள பனையூரில் உள்ள விஜய்யின் வீடு ஆகிய இடங்களில் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மிரட்டல் விடுத்த நபரைத் தேடினர். அப்போது அந்த அழைப்பை சென்னை போரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்தது தெரியவந்தது. எனினும் அந்த இளைஞர்தான் மிரட்டல் அழைப்பை மேற்கொண்டாரா என்பது பற்றி காவல் துறை இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.