கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத கட்டுப்பாட்டை உறுதி செய்யும் வகையில் நியூ START டிரீட்டி என்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டன. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தலைமையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதியுடன் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிறது. இரு நாடுகளும் ஒப்புக்கொண்டால், இந்த ஒப்பந்தத்தை அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஒப்பந்தத்தை ஓர் ஆண்டு நீட்டிக்க விரும்புகிறார். ஆனால், வடகொரியா சீனா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கவும் அதிபர் தேர்தல் காரணமாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இது குறித்து வால்டாய் கலந்துரையாடல் கிளப்பின் 17ஆவது ஆண்டு கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "அவர்கள் (அமெரிக்கா) இதை தேவையற்றதாகக் கருதினால், எங்களால் எதுவும் செய்ய முடியாது,
இதனால் ரஷ்யாவின் பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களிடம் அதிநவீன ஆயுதங்கள் உள்ளன, அவை எங்களை காக்கும்.
அதே நேரம் புதிய START ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாவிட்டால், உலக நாடுகளின் ஆயுதப் பந்தயத்தைத் தடுக்க எந்த ஒப்பந்தமும் இருக்காது. இது ஆபத்தானது" என்றார்.
இந்த START ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாவிட்டால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கண்காணிக்கப்படாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிரம்ப் - ஜோ பிடன் இறுதிகட்ட விவாதம்!