உலகளாவிய பெருந்தொற்றாக மாறி இருக்கும் கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, உலக அளவில் இடம்பெயர்ந்திருக்கும் அமெரிக்கர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், சர்வதேச அளவில் இதற்கு முன்னோடியாக வெளிநாட்டிலிருந்து, தமது தாயகம் திரும்ப விரும்பும் அமெரிக்கர்களுக்கு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ், “ கடந்த ஜனவரி 29 முதல் 127-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, இதுவரை 750 விமானங்களில் 71,538 அமெரிக்கர்கள் தமது தாயகம் வந்தடைந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
தூதரக விவகாரங்களுக்கான முதன்மை துணை உதவி செயலாளர் இயன் பிரவுன்லீ கூறுகையில், “தெற்கு ஆசியா, மத்திய ஆசியா உள்ளிட்ட பிராந்தியங்களில் இருந்து, குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் இருந்து நாடு திரும்புவதற்கான உதவியைக் கோரும் அமெரிக்க குடிமக்களின் எண்ணிக்கையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்”என்று தெரிவித்தார்.
இந்தச் சிறப்பு ஏற்பாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே நாடு திரும்ப அனுமதிக்கப்படுவர். நாடு திரும்புபவர்கள் அனைவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் கண்டறிதல் சோதனைக்குள்ளாக்கப்படுவார்கள். கோவிட்-19 அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். மற்றவர்கள் தற்போதைய மருத்துவ வழிகாட்டுதலின் கீழ், தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனாவால் ஆண்களே அதிகம் உயிரிழப்பர் - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!