தெற்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள புனித ஷெப்பர்ட் கத்தோலிக்க தேவாலயத்தில் முற்றத்தில் உள்ள இயேசுநாதர் சிலையை சில அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் இயேசுநாதர் சிலையின் தலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் நடந்திருக்கக் கூடும் என தேவாலயத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய தேவாலய செய்தி தொடர்பாளர் மேரி ரோஸ் அகஸ்டா, "இது தேவாலயத்தின் சொத்து மட்டுமல்ல, இது புனிதமானது. சிலையின் மீதான தாக்குதல் புதன்கிழமை (ஜூலை15) காலை எட்டு மணிக்கு முன்னதாக நடைபெற்று இருக்கக்கூடும்.
புதன்கிழமை அன்று தேவாலயத்திற்கு வந்து பார்த்தபோது இயேசுநாதரின் தலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு கீழே வீசப் பட்டிருந்தது. இந்த செயலை வேண்டுமென்றே செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினரிடம் தேவாலயத்தின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய செயலோ, மன்னிக்கக்கூடிய செயலோ அல்ல.
தேவாலயத்தில் மக்கள் அமைதியை உணர்கின்றனர். இந்த இடத்தில் இது போன்ற செயல் ஏற்கக்கூடியது அல்ல. இது குறித்து விரைவான விசாரணை வேண்டும்" என அவர் கூறினார்.