ஜோகன்னஸ்பர்க்: மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்கா கொள்ளுபேரன் சதீஷ் துபெலியா தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மூன்று நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (நவ.22) கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆளானார் என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபெலியாவின் சகோதரி உமா துபெலியா மெஸ்திரி கூறுகையில், “நிமோனியா காரணமாக சதீஷ் துபெலியா ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையிலே உயிரிழந்துவிட்டார்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “என் அன்புக்குரிய சகோதரர் நிமோனியா நோயால் ஒரு மாதத்திற்குப் பிறகு காலமானார். நிமோனியா காய்ச்சலுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது அவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது” எனத் தெரிவித்துள்ளார். சதீஷ்க்கு கீர்த்தி மேனன் என்ற மற்றொரு சகோதரியும் உள்ளார். சதீஷ் துபெலியா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை புகைப்பட கலைஞராகவும், வீடியோகிராஃபராகவும் கழித்தார்.
மேலும் டர்பனுக்கு அருகில் மகாத்மா காந்தியடிகளால் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு உதவுவதில் மிக தீவிரமாக இருந்தார். சதீஷின் மறைவிற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சதீஷின் நண்பர்கள் கூறுகையில், “நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். சதீஷ் மனிதாபிமான செயற்பாட்டாளர்” என்றார். துபெலியா வின் இறுதி சடங்கு ஏற்பாடுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: இந்தியா மீதான எனது மோகத்திற்கு காந்தியின் வரலாறே முழுமுதற் காரணம்!