வேலூர்: காட்பாடி வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியனுக்கு வந்த புகார் வந்தது.
அதனடிப்படையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் வேலூர் பறக்கும்படை தாசில்தார் கோடீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயப்பிரகாஷ், உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரவி, அலுவலர்கள் நேற்று (ஜூன் 22) காட்பாடி ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரிசியை கடத்தியதாக ஆந்திராவை சேர்ந்த சேகர் (33), காட்பாடி மதிநகரைச் சேர்ந்த சேகர் (49) ஆகியோரை கைதுசெய்து காரையும் அரிசியையும் பறிமுதல்செய்தனர்.
விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் விசாரணையில் கைதுசெய்யப்பட்ட மதிநகரைச் சேர்ந்த சேகர், ஆந்திரா மாநிலத்தில் மாங்காய் ஜூஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்ததும், அந்தக் கம்பெனியில் உள்ள உணவகத்தில் தொழிலாளர்களுக்கு சமைத்து கொடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி சென்றதும் தெரியவந்தது.