திருச்சி மாவட்டம் செம்பட்டு எம்கேடி காலனியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக 55 பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதி தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணியாற்றியவர்கள்.
தற்போது சுற்றுச்சூழல் மாசு காரணமாக தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தொழிலாளர்கள் அதே பகுதியில் வசித்துவருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வசித்து வரும் இடத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனால் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரன் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
அதையடுத்து அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: அன்னை தெரசா மகளிர் பல்கலை. சம்பளம் தரவில்லையென தர்ணா!