திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகரும், அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் 2090 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் தனபால் வழங்கினார். இதில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், இலவச மடிக்கணினிகள் இந்த கல்வியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை அறிந்த முன்னாள் மாணவர்கள், தங்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படாமல் இருப்பதைக்கூறி, சபாநாயகரை முற்றுகையிட முயன்றனர்.
இந்நிலையில், அவர்களை பள்ளிக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், மடிக்கணினி கோரிக்கையை மனுவாக பெற்று சபாநாயகரிடம் கொடுத்தனர். அதன் காரணமாக மாணவர்கள் அமைதி காத்து வந்தனர்.
மேலும், இந்த தகவலை அறிந்த சபாநாயகர் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மாணவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.