சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம், செந்தாரப்பட்டி அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று, கர்சன் பயோ நேச்சுரல் என்கிற பெயரில் ரசாயன ஆலை கட்டி வருகிறது.
இந்த ஆலை பயன்பாட்டிற்கு வந்தால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் அழியும் நிலை உருவாகும் ஆபத்து உள்ளது. எனவே அப்பகுதியில் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விலை நிலங்கள் நிறைந்த பகுதியில் ரசாயன ஆலை அமைப்பதை தடுத்து நிறுத்தி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். மேலும் விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில் ஐந்தாயிரம் மேற்பட்ட குடும்பத்தினர், விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு நம்பி வாழ்ந்து வருகிறோம்.
தலைமுறை தலைமுறையாக மண்மலை பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் இங்கு ரசாயன ஆலை கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆலை பயன்பாட்டுக்கு வருகின்ற பொழுது ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் விளை நிலங்களுக்குள் இறங்கி, நிலத்தடி நீர் விஷமாக மாறிவிடும். இதனால் விவசாயம் அழிந்து, மனிதர்கள் உயிர் வாழ்வதே கேள்விக்குறியாகும்.
எனவே இப்பகுதியில் ரசாயன ஆலை அமைக்க தடை விதிக்க வேண்டும். இங்கு உள்ள 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை அரசு பாதுகாக்க வேண்டும்' என்று கூறினர்.
இதையும் படிங்க: ‘நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன்