சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக நேற்று (ஏப்ரல் 1) மதுரை வந்த பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இரவு 8.35 மணியளவில் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் அவரை வரேவற்றார். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பாக சிவாச்சாரியார்கள் செந்தில் பட்டர், ஹலாஸ்யபட்டர் இருவரும் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
கோயிலுக்குள் சென்ற பிரதமர், மீனாட்சியை வழிபட்டு பின்னர் சுந்தரேஸ்வரரை வழிபட்டார். கோயிலில் உள்ள சிலைகளை பிரதமர் ஆர்வத்துடன் கண்டு களித்தார்.
இரவு 9 மணி அளவில் மதுரை பசுமலை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். மோடியின் வருகையையொட்டி கோயிலுக்குள் இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்த மோடி, மீனாட்சி அம்மனை தரிசித்தார். பிரதமரான பின் முதல் முறையாக தற்போது மீனாட்சி கோயிலுக்கு வருகை தந்துள்ளார்.
இன்று காலை 10.30 மணி அளவில் கருப்பாயூரணி அருகே உள்ள அம்மா திடலில் பிரதமர் மோடி அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.