மதுரை: அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், வைகை ஆற்றில் இறங்கவும் மதுரைக்கு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளுவார்.
இதற்காக அழகர் கோவிலில் இருந்து நேற்று (ஏப்.14) மாலை கொண்டப்பநாயக்கர் மண்டபத்துக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடியுடன் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு தங்கப்பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில்முன்பு கள்ளழகருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தப்பட்டு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அதிர்வேட்டு முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.
தொடர்ந்து வழியில் உள்ள பொய்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக வைகை கரை வரை உள்ள 450-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்நிலையில் மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி இன்று (ஏப்.15) நடைபெறுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நாளை (ஏப்.16) காலை 05.50 மணி முதல் 06.20 மணிக்குள் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து வைகை ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இதையும் படிங்க: மதுரையின் அரசி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : 2 டன் வண்ண மலர்களால் மேடை அலங்காரம்!