அன்றைய ஆங்கிலேய அரசு சென்னை மாகாணத்திற்கு 999 ஆண்டுகள் குத்தகைக்கு என கடந்த 1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள், முல்லை பெரியாறு அணை கட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இன்றுடன் 135 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அடிக்கடி பஞ்சம், பசி, பட்டினி, கடும் வறட்சியில் சிக்கும் தென் மாவட்ட மக்களின் இன்னலைப் போக்குவதற்காக அன்றைய சேதுபதி சமஸ்தானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதிலொன்றுதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆற்று நீரை அன்றைய மதுரை, சேதுபதிச் சீமைக்கு கொண்டு வருவது. இதற்காக சேதுபதி மன்னர் தன்னுடைய அமைச்சர் முத்திருளப்ப பிள்ளையை ஆய்வுக்கு அனுப்பினார்.
![facts of mullaperiyar dam, mullaperiyar dam, முல்லை பெரியாறு அணை, முல்லை பெரியாறு விவகாரம், முல்லை பெரியாறு பிரச்னை, முல்லை பெரியாறு உண்மை கதை, mullai periyaru unmai kadhai, mullai periyaru dam, mullaperiyar dam facts, முல்லைப் பெரியாறு அணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13482561_madurai-under-poverty-before-mullaperiyar-dam.jpg)
பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர், இத்திட்டத்திற்கான வரைவறிக்கையை முத்திருளப்ப பிள்ளை வழங்கினாலும், நிறைவேற்ற போதிய நிதியின்மை காரணமாகக் கைவிடப்பட்டது.
பின்னர் ஆங்கிலேயர்கள் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தினர். பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு கர்னல் பென்னிக்குயிக், ஆங்கிலேய அரசாங்கத்தின் உதவியோடு இடையறாமல் முயற்சி மேற்கொண்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்றினார்.
பொறியியல் அதிசயம்
மேற்கே அரபிக்கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை, கிழக்கே திருப்பும் ஒரு பொறியியல் அதிசயம்தான் முல்லைப் பெரியாறு அணை. முல்லையாறும் பேரியாறும் (பேரியாறு என்பதுதான் மிகச் சரி) சந்திக்கும் இடத்தில் இரண்டு மலைகளையே அரணாகக் கொண்டு அமைக்கப்பட்ட அணை. நதிகள் இணைப்புக் குறித்து இன்று பேசுகின்றோமே அதற்கு விதை விதைத்தவர்கள் சேதுபதி அமைச்சர் முத்திருளப்பிள்ளை என்றால், அதை நிறைவேற்றியவர் பென்னிக்குயிக்.
1887ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்ட தொடங்கி 1895ஆம் ஆண்டு வரை பெருமழை, வெள்ளம், காலரா, வனவிலங்குகள் என பல்வேறு இடையூறுகளைத் தாண்டி இந்த அணை கட்டப்பட்டது. அணை கட்டுமானப் பணியின்போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அணையின் சிறப்பு
நாட்டிலுள்ள பிற அணைகளைப் போன்று முல்லை பெரியாறு அணை ஆற்றின் போக்கில் கட்டப்பட்டதல்ல. இரண்டு ஆறுகளின் போக்கைத் தடுத்து, அதன் எதிர் திசையில் சற்றேறக்குறைய 12 கி.மீ. தொலைவிலுள்ள தேக்கடி மதகுப் பகுதிக்கு நீர் மட்டத்தை உயர்த்தி தண்ணீர் பெறும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.
![facts of mullaperiyar dam, mullaperiyar dam, முல்லை பெரியாறு அணை, முல்லை பெரியாறு விவகாரம், முல்லை பெரியாறு பிரச்னை, முல்லை பெரியாறு உண்மை கதை, mullai periyaru unmai kadhai, mullai periyaru dam, mullaperiyar dam facts, முல்லைப் பெரியாறு அணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13482561_mullaperiyar-dam-construction.jpg)
அதாவது, அணை அமைந்துள்ள இடம் மிக பள்ளமான பகுதியாகும். தண்ணீர் பெறக்கூடிய தேக்கடி மதகு உயரமான பகுதியாகும். ஆகையால் தேக்கடியில் அமைந்துள்ள மதகுப் பகுதிக்கு தண்ணீர் வர வேண்டுமானால், அணையின் நீர் மட்டம் குறைந்தது 106 அடி உயர வேண்டும். அப்போதுதான் அந்தத் தண்ணீரை தேக்கடி மதகிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பெற முடியும்.
பல்லுயிர்ச்சூழல்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்கப் பகுதி 'ஏரி' என்றே அழைக்கப்படுகிறது. இந்த அணையில் தேக்கப்படும் 106 அடிக்குக் கீழுள்ள தண்ணீரை கேரளாவோ, தமிழ்நாடோ பயன்படுத்த முடியாது. ஆகையால் டெட் ஸ்டோரேஜ் எனப்படும் தேங்கு நீராகவே ஆண்டு முழுவதும் இந்த 106 அடிக்கு கீழுள்ள தண்ணீர் இருக்கும். 106 அடிக்கு மேல் நீர் மட்டம் உயரும்போதுதான், அந்தத் தண்ணீரை தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்கு எடுக்க முடியும்.
இதன் காரணமாக முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கப்பகுதி வனவிலங்குகளின் சொர்க்கமாகவே திகழ்கிறது. யானை, புலி, கரடி, சிறுத்தை. சிங்கம், மான் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களும் இங்கே மிகுந்த செழிப்புடன் வாழ்கின்றன.
காரணம் ஆண்டு முழுவதும் இங்கு தேங்கிக் கிடக்கும் தண்ணீர், உள்ளபடியே சொல்லப்போனால் 136 அடி, 142 அடி தண்ணீர் என்று இங்கு பூதாகரப்படுத்தப்படுகின்ற பிரச்சனை என்பது, 106 அடிக்கு மேல் உள்ள 36 அடி தண்ணீர்தான்.
நீர் ஒப்பந்தம்
கடந்த 1886ஆம் ஆண்டு அக்டோபர் 29 கொல்லம் ஆண்டு 1062 துலா மாதம் 14ஆம் நாள் திருவாங்கூர் மன்னருக்கும், அன்றைய ஆங்கிலேய இந்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, 999 ஆண்டுகளுக்கு 7 பிரிவுகளின் கீழ் உரிமைகள் அளிக்கப்பட்டன.
- பெரியாறு அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் 155 அடி நில மட்டம் வரை உள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்.
- இதர கட்டுமானங்களுக்காக அருகே கூடுதலாக 100 ஏக்கர் நிலம்.
- 8 ஆயிரத்து 100 ஏக்கர் நிலங்களில் அணை கட்ட மற்றும் பிற பணிகளை மேற்கொள்ளும் உரிமை.
- குறிப்பிட்ட அந்நிலப்பரப்பில் விழும் மற்றும் ஓடும் தண்ணீர் முழுவதையும் பயன்படுத்தும் உரிமை.
- குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மரங்கள், காடுகள் ஒப்பந்த காலத்தில் புதிதாக வளர்க்கப்படும் மரங்கள் அனைத்திற்கும் உரிமை.
- மீன் பிடிக்கும் உரிமை.
- இந்தப் பகுதிகளில் அணை கட்டும்போதும், அதன் பின்பும் ஆள்கள் வாகனங்கள் போக்குவரத்திற்காக சாலைகள் அமைத்துக் கொள்ள ஏக்கருக்கு ரூ.5 குத்தகையுடன் உரிமை