மதுரை வடக்குமாசி வீதி சந்திப்பில் பிரபல அசைவ உணவகம் மிளகு என்ற பெயரில் இயங்கி வருகிறது. தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு புதியதாக மக்களைக் கவரும் வண்ணம் ஒரு விளம்பரம் செய்திருந்தார்கள். அதில், மதுரையில் கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் வெளியானது.
இதனை அறிந்த பிராமணர் சங்க நிர்வாகிகள், அந்த விளம்பரம் வெளியிட்ட உணவகத்தை, வியாழக்கிழமையன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் உணவகத்தின் உள்ளே நுழைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நிர்வாகத்தை அணுகி விளக்கம் கேட்டபோது தெரியாமல் நடந்து விட்டது என்றும், அதற்கான மறுப்பு மற்றும் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுகிறோம் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பழம்பெருமை வாய்ந்த மதுரை மாநகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த கடையில், இதுபோன்ற விளம்பரம் வந்ததால் இப்பகுதி மக்களும் கூடினர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தினரைச் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.
இதனிடையே கும்பகோணம் ஐயர் சிக்கன் விளம்பரத்தை வெளியிட்ட உணவகம் பகிரங்க மன்னிப்பு கேட்டு வெளியிட்டுள்ள கடிதம், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.