மதுரை: பல்வேறு காவல்துறை உயர் அலுவலர்கள் பணியிட மாற்றத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. அந்த வகையில் மதுரை தென் மண்டல காவல்துறைத் தலைவராக அஸ்ரா கர்க்கை பணி நியமனம் செய்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அஸ்ரா கர்க், அச்சமயம் நடைபெற்ற தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை கடுமையான நடவடிக்கைகளின் மூலம் தடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் பாராட்டைப் பெற்றவர். அதேபோன்று மதுரையில் ரவுடியிசத்தை முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மதுரை மண்டல காவல் துறைத் தலைவராக அவரைப் பணி நியமனம் செய்து அறிவித்துள்ளது. அனைத்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அலுவலர்கள் தங்களது சொத்துக்கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி, கடந்த ஜனவரி 05ஆம் தேதி, தனது சொத்து விவரங்களை வெளிப்படையாகத் தாக்கல் செய்து அசத்தியுள்ளார், அஸ்ரா கர்க்.
அதில் சென்னை மதுரவாயல் நெற்குன்றம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 2550 சதுர அடியில் ஒரு பிளாட்டும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் நிலமும் ஆக இரண்டு அசையா சொத்துக்கள் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் இருப்பதாகக் கணக்கு காட்டியுள்ளார்.
மிக நேர்மையான, அதே சமயம் சட்டம் ஒழுங்கில் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாத அஸ்ரா கர்க்கின் தற்போதைய ஐஜி பொறுப்பு, தென் மாவட்டங்களில் அமைதியைக் கொண்டு வரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
இதையும் படிங்க: 'பட்ஜெட் வெறும் ஏமாற்று வெத்துவேட்டுதான்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்