மதுரை சொக்கலிங்க நகரை சேர்ந்த நாகராஜன் (56) - குருவம்மாள் (54) தம்பதி வீட்டின் அருகே வடைக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இளைய மகன் மாரி செல்வம்(25) தொழில்கல்வி படிப்பை பாதியிலேயே கைவிட்ட நிலையில் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளான மாரிச்செல்வம் குடிப்பதற்காக பணம் கேட்டு தாய், தந்தையை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 22 அன்று அளவுக்கு அதிகமான மது போதையில் வீட்டிற்கு வந்த மாரி செல்வம் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பெற்றோர், மாரி செல்வத்தின் கழுத்தை ஸ்கிப்பிங் கயிறை கொண்டு நெரித்து கொலை செய்துவிட்டு, மதுரை எஸ் எஸ் காலனி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாரி செல்வத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நாகராஜ், குருவம்மாள் மற்றும் மூத்த மகன் ஆகியோரிடம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில், இக்கொலை சம்பவத்தில் மூத்த மகன் மயில்ராஜுக்கும் தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்ததை அடுத்து அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் காதலனுடன் பேசியதால் காதலியை கொன்ற காதலன் கைது...