ஈரோடு: ரங்கம்பாளையம் கந்தன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று (பிப். 19), நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணப்படும் சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு பணிக்காக நேற்று இரவு முழுவதும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி பணிபுரிந்து வந்தார்.
இன்று (பிப். 20) அதிகாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது காஞ்சிக்கோயில் அருகே உள்ள சின்னியம்பாளையம் என்னும் இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த கல்லில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து காஞ்சிக்கோயில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெய்வேலியில் அதிவேகமாக வந்த கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு