கோவை: கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மேலும், இரண்டு தவணை தடுப்பூசி சான்று, முகக் கவசம் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி சொர்க்கவாசல் திறப்பிற்குப் பின்னர் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
இதனைத் தொடர்ந்து அரங்கநாதனுக்கு தினசரி பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று அரங்கநாத பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயிலின் உள்பிரகாரத்தில் வலம்வந்து அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு அரங்கநாதருக்குத் திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ஷேச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராய் அரங்கநாதர் பரமபத வாசல் முன்பு எழுந்தருளிய நிலையில் அதிகாலை சரியாக 5.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ராமானுஜர், ஆழ்வார்களுக்கு முதலில் அரங்கநாதர் காட்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து முன்மண்டபம் வந்தடைந்தார். பின்னர், கோயில் காலை 6 மணி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் காரை அரங்கனைத் தரிசித்து அருளாசி பெற்றுச்சென்றனர்.
இதையும் படிங்க: நாங்கள் இல்லாமல் அயோத்தி, மதுரா இயக்கமா? உத்தரப் பிரதேசத்தில் சிவசேனா தனித்துப் போட்டி!