கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (ஏப்.16) NUCLEAR மருத்துவப் பிரிவு மற்றும் INTERVENTIONAL GASTRO சிகிச்சைப் பிரிவுகளைத் தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஹீமோபிலியா எனப்படும் இரத்தம் உறையா நோய் நாள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், 87 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவத் துறை சார்பில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழ்நாட்டில் 100% மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.
மத்திய அரசு தான் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் 24 இடங்கள் நிரப்ப வேண்டும்.
மருத்துவ கல்விக்கான விண்ணப்பங்கள்: மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில், இருபத்தி நான்கு இடங்களை மத்திய அரசு நிரப்பவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் அழுத்தம் கொடுத்துள்ளார். நாடு முழுவதும் 300 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவில், தற்பொழுது வரை ஏழு வகை வைரஸ்கள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், அரசு எடுத்த நடவடிக்கையைக் கடந்த 21 நாட்களாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் 92.38% முதல் தவணைத் தடுப்பூசியும், 77.28% இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 88% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. நாட்டிலேயே தமிழ்நாடு அரசுதான் மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தைச் சொந்தமாக வைத்துள்ளது.
குளறுபடிகள் களையப்படும்: பிற நாடுகள் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் வைரஸ் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்குப் பெட்டகம் வழங்குவதில் கடந்த ஆட்சிக் காலத்தில் குளறுபடி ஏற்பட்டது.
அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விடுபட்டவர்களுக்கு மாவட்டம் வாரியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 355 ஒன்றியங்களில் 'இல்லம் தேடி மருத்துவம்' செயல்படுத்தப்பட்டு உள்ளது.
கோவையில் 159 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. பூஸ்டர் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளிலும் போட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 2 புதிய இதய சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும்' - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்