சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சரஸ்வதி பாண்டுரங்கன் என்பவருக்குச் சொந்தமான நிலம், சிங்காரம் பிள்ளை பள்ளி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த இடத்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இயங்கிவருகின்றன.
கல்விப் பயன்பாட்டிற்காக விற்கப்பட்ட அந்த நிலத்தை, பள்ளியின் செயலாளர், தனி நபர்களுக்கு விற்பதாகவும், அவர்கள் அந்த இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சட்டவிரோதமாக விற்பனை செய்ததை ரத்துசெய்து பள்ளி நிலத்தை கல்விப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த உத்தரவிடக்கோரியும், பள்ளி செயலாளர் மீது நடவடிக்கை கோரியும் வில்லிவாக்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வு, தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை, பள்ளி நிர்வாகம் ஆகியோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
அதேசமயம், தொகுதியின் நலனுக்காகச் செய்துள்ள பணிகளைக் கூடுதல் மனுவாக தாக்கல் செய்யும்படி ரங்கநாதனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல பள்ளியின் முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான சிவசுப்பிரமணி என்பவர் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.