இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது, சட்டம் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பழைய கட்டடத்துக்கு பதிலாக, புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும். குற்ற வழக்கு தொடர்வுத் துறை மற்றும் சட்டக் கல்வி இயக்குநரகங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டடம், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் அறிவிப்புகள்
41 ஆயிரத்து 133 அங்கன்வாடி மையங்களில் சிறிய கட்டட பராமரிப்புப் பணிகள், தச்சு வேலை, மின் மற்றும் பிளம்பிங் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்துக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சென்ற ஆண்டை போலவே நடப்பாண்டிலும், 10 ஆயிரத்து 888 அங்கன்வாடி மையங்களுக்கு 10 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் மேசை, நாற்காலி, இரும்பு அலமாரி போன்ற தளவாட சாமான்கள் வழங்கப்படும்.
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இரண்டு இணை வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் தற்போது 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களில், 8 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3.23 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சென்னை மைலாப்பூரில் 9 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமூக நல ஆணையரகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் காப்பகத்துக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடமும், குழந்தைகள் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பணியாளர்களுக்கு குடியிருப்பும், 10 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க திமுக முடிவு