ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசித்துவரும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தனது தூக்கு தண்டணையை ஆயுள் தண்டனையாக தமிழ்நாடு அரசு கடந்த 2000ஆம் ஆண்டு குறைத்த நிலையில், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழ்நாடு அரசு விடுதலை செய்துள்ளது. ஆயுள் தண்டனை கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு சிறை நிர்வாகத்தால் பரோல் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பரோல் மனு மீதான வழக்கு விசாரணையில் தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைக்கும் விதமாக தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நளினி தனது மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் கேட்டு தாக்கல் செய்த வழக்கில் அவரே நேரில் ஆஜராகி வாதிடுவது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.