சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து ஆய்வுக் கூட்டத்தின்போது, "தமிழர் பாரம்பரியம், கலாசாரம், இயற்கை மருத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, அரசியல் அமைப்பின் முக்கிய அம்சங்கள், அடிப்படை வாழ்வியல் தத்துவங்கள், நன்னெறி கருத்துகள் ஆகிய பொருண்மைகளை உள்ளடக்கிய வகையில் பாடத்திட்டங்கள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்பின் ‘தமிழைப் பிழையின்றி எழுதுதல்’ என்ற குறுகிய காலப் பயிற்சி வகுப்பினைத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஓலைச்சுவடியை வாசிப்பதற்கான தமிழ்க் கணினி மென்பொருள் தயாரிக்கும் பணியை ஆராய உரிய வல்லுநர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். பழைய ஓலைச்சுவடி படிப்பவர்களுக்குப் பயிற்சி அளிக்க உரிய வல்லுநர்களைக் கண்டறிந்து பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.
இதனைத் தொடர்ந்து பார்வைத் திறன் குறைபாடுள்ளோருக்கான objective type தேர்வு எழுதப் பயன்படும் கருவி தயாரிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலம்பம் தொடர்பான பாடங்களை உரிய பயிற்சிகள் கொண்ட சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு எழுத முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: டெல்லிக்கு புறப்பட்ட வீரர்களின் உடல்கள்!