அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வாஷிங்டன் நகரில், அமெரிக்க சிறு, குறு தொழில்கள் கவுன்சிலின் நிர்வாகிகளை நேரில் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளைப் பெறுவது குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய பன்னீர்செல்வம், ' இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டில் புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கை, ஸ்டார்ட் அப் இன்னோவேஷன் கொள்கை, உணவுப் பதப்படுத்தும் கொள்கை, எரிசக்தி கொள்கையை வெளியிட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
மேலும், 'சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தாமதமின்றி அரசு அனுமதி வழங்குகிறது. இதற்கென அரசு தனியாக இணையதளம் ஆரம்பித்து அதன்மூலம், ஏற்கெனவே 10 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.
எனவே, தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது. தமிழ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 'திரிஷ்யம்' இயக்குநரின் மிரள வைக்கும் 'த பாடி' ட்ரெய்லர்!