சென்னை: காரப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலப்பகுதியை, கழுவேலி நிலம் என வகைப்படுத்திய வருவாய் துறை, அதில் 8 ஏக்கர் அளவிற்கு, தரமணியில் செயல்பட்டுவரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றம் செய்து கடந்த 2014ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ஐ.ஹெச்.சேகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், பக்கிங்காம் கல்வாயில் வரும் உபரி நீர், துரைப்பாக்கம் - ஒக்கியம் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை சேகரிக்க பயன்படும் கழுவேலி மற்றும் சதுப்பு நிலப் பகுதியை, பாதுகாக்க வேண்டிய அரசே, அந்நிலத்தை புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு கிடையாது - எல்.முருகன்