சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2021ஆம் ஆண்டில் 91 நாள்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாள்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
மேலும், 151 நாள்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாள்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாள்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக ’சாதனை ஊக்கத்தொகை’ வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்களுக்கு, மொத்தம் ஏழு கோடியே ஒரு லட்ச ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு!