தமிழ்நாட்டில் காலியாக இருந்த 31 மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு நேரடித் தேர்வு நடத்துவது தொடர்பாக 2019 ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பாணை வெளியிட்டது.
அதில், தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு அதிகபட்ச வயது வரம்பாக 48 வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை எடுக்காததால், எவரும் தேர்வு செய்யப்படவில்லை.
இதையடுத்து, 31 மாவட்ட நீதிபதிகள் பதவிகளை நேரடித் தேர்வு மூலம் நிரப்புவது தொடர்பாக, 2019 டிசம்பர் 12ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான வயது வரம்புச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் காசி பாண்டியன், உதயகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
தமிழ்நாடு நீதித்துறை பணிகள் விதியில், வயது வரம்புச் சலுகை வழங்க தடை ஏதும் இல்லாத நிலையில், இச்சலுகையை மறுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு, ஜனவரி 6ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசும், உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளை உயர்நீதிமன்றத்தில் வழங்க உத்தரவு