தொலைதொடர்பு நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் கடும் சரிவால் வோடஃபோன்-ஐடியா, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இதனை சரி செய்ய இரண்டு நிறுவனங்களும் கடந்த வாரம் வாடிக்கையாளர்களின் சேவைக் கட்டணத்தை உயர்த்தின.
இந்நிலையில், ஏர்டெல், வோடஃபோன் கடந்த 14 ஆண்டுகளில், மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வைத்திருக்கின்றன.
இதில், வேடஃபோன்-ஐடியா நிறுவனம் மட்டுமே, 53 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர, அதற்குண்டான நிலுவைத் தொகைக்கான வட்டி, அபராதம் ஆகியவற்றை உடனடியாக தள்ளுபடி செய்யுமாறு தொலைதொடர்பு நிறுவனங்கள் கோரி வருகின்றன.
மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என, அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியிருக்கிறார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குசந்தையில் வோடஃபோன்-ஐடியா பங்குகள் 9 விழுக்காடு அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாட்களாக இலவச சேவை வழங்கிவந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இன்று முதல் சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய உச்சத்தில் வெங்காய விலை!