இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடி குறித்த விவரங்களை சந்திரசேகர் கவுர் என்ற செயற்பாட்டாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதில் நடப்பு காலாண்டில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட 18 பொதுத்துறை வங்கிகளில் 2 ஆயிரத்து 480 மோசடி நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி மூலம் 31 ஆயிரத்து 898 கோடி ரூபாய் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 12 ஆயிரத்து 12 கோடி ரூபாய் அளவிலான மோசடி நடைபெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அலகாபாத் வங்கியில் 2 ஆயிரத்து 855 கோடி மோசடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 ஆயிரத்து 526 கோடியும் மோசடி நடைபெற்றுள்ளது. அதேவேளையில் எத்தகைய மோசடிகள், மோசடியின் மூலம் வாடிக்கையாளர்கள் அடைந்த இழப்புகள் என்ன போன்ற விவரங்களை தகவலறியும் சட்டத்தின் கீழ் தரப்படவில்லை.
மேற்கண்ட வங்கிகளுடன் பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, சென்டல் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டெட் பாங்க் ஆஃப் இந்தியா, கார்பரேஷன் வங்கி, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, சின்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, மகாராஷ்டிரா வங்கி, ஆந்திரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் சிந்த் வங்கி ஆகிய வங்கிகள், வங்கி மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.