மதுரை, சிறுமலை பாத்திமா நகரைச் சேர்ந்தவர், ராஜா (30). இவர் பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் வைகை ஆற்றங்கரையோரமாக ஆட்டோ மெக்கானிக் சரிபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு கடந்த சில நாட்களாக, காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தனக்கு கரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில், நேற்று (ஜூலை 2) அதிகாலை தனது கடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கரிமேடு காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ராஜாவின் உடலைக் கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் தற்கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெத்தானியாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.