திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 2 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று (ஜூன் 19) ஒரே நாளில் திருநெல்வேலியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஊழியர் உள்பட 2 பேர் கரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த சித்திக் பாபு (34) என்பவர், திருநெல்வேலி அரசு தலைமை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கான அட்டைகளை எழுதும் பணியை கவனித்து வந்துள்ளார்.
இவருக்கு கரோனா தொற்று அறிகுறி ஏற்படவே, கடந்ந 13ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று(ஜூன் 19) சிகிச்சைப் பலனின்றி சித்திக்பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.
இவருக்கு ஏற்கெனவே சிறுநீரக கோளாறு இருந்ததாகவும்; அதனாலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சையது முகம்மது (61) என்ற நபரும் நேற்று(ஜூன் 19) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவருக்கும் ஏற்கெனவே கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு கோளாறு இருந்ததால், சிகிச்சைப் பலனளிக்கவில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருநெல்வேலியில் கரோனா பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. திருநெல்வேலியில் நேற்று மாலை நிலவரப்படி 584 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகரில் சலூன் கடை, பிரபல நகைக்கடை, தனியார் - அரசு பொதுத்துறை வங்கி, ஊழியர்கள் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.