புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, தலைமையில் இன்று(ஜூலை 20) நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1,016 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜூலை 19ஆம் தேதி நிலவரப்படி மாவட்டத்தில் இதுவரை 21,818 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 1,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று தேவைக்கேற்ப கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் 37 கட்டுப்பாட்டு மண்டலங்களாக அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போன்று வெளிநாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்த நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் மாத்தூர், திருமயம், கே.புதுப்பட்டி, புதுக்கோட்டை, களமாவூர் உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்கப்பட்டு தற்பொழுது 124 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே சமயம் 631 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தல், மனநலப் பயிற்சி, ஆலோசனை அளித்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்யவும் அரசு தனிகவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் காபி, சிக்கன் சூப், பால், கடலைப் பருப்பு, சுண்டல், சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, காய்கறி பிரியாணி, நெய் மிளகுபொங்கல், வேக வைத்த பாசிப்பயறு, ரவா முந்திரிபொங்கல் போன்ற பல்வேறு வகையான சத்தான உணவுகள் தரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக அரசு மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சையால் இதுவரை 558 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தவும், வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.