ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த மாவட்டங்களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அவசர தேவைக்காக வெளியே செல்பவர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் இ-பாஸ் வழங்கப்படுகிறது. கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ள சூழலில் திருமணம், இறப்பு, மருத்துவ அவசர தேவைக்காக வழங்கப்படும் இ-பாஸ்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டது.
இந்த இ-பாஸ்களை 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு, சட்ட விரோதமாக குறிப்பிட்ட சில நபர்கள் தயாரித்து கொடுப்பதாக தொடர் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்ட போது, மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் குமரேசன், ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் உதயா ஆகிய அரசு அலுவலர்கள் இருவர், ஓலா கார் ஓட்டுநர் தேவேந்திரன் உள்ளிட்ட 5 பேர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நூற்றுக்கணக்கான இ-பாஸ்களை சட்டவிரோதமாக தயாரித்து வழங்கியது தெரியவந்தது.
இந்த கைது சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், "தமிழ்நாட்டில் முதல்முறையாக காவல்துறை தரப்பில் இந்த இ-பாஸ்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பிலும் மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்திலும் வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
சில சர்ச்சைகள் எழுந்த காரணத்தால், இதில் முறைகேடு நடைபெறாமல இருக்க ஒருங்கிணைந்த இணையத்தளம் வழியாக மட்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இ-பாஸ் பெற வழி செய்யப்பட்டது. இதில், சென்னையில் வழங்குவதற்கு என்று பணியமர்த்தப்பட்ட இந்த இரண்டு அலுவலர்கள் உள்ளிட்ட சிலர் கூட்டு சேர்ந்து இ-பாஸ்களை சட்டவிரோதமாக தயாரித்து, விற்றது தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு அரசு அலுவலர்கள் தவிர அரசு துறைச்சார்ந்த வேறு சில அலுவலர்களும் இந்த குற்றத்தில் ஈடுபட்டனரா? இதற்கு பின்னால் உள்ளவர்கள் யார்? என்பது உள்ளிட்ட விரிவான தகவல்கள் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும்" என கூறினர்.
இதேபோல தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, கடலூர் போன்ற மாவட்டங்களிலும் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அரசு வழங்கும் இலவச இ-பாஸ்களை சட்ட விரோதமாக பணத்திற்கு விற்றது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.