புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் என்ற இயக்குநர் உத்தரவுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த மூன்று தினங்களாக திமுக, காங்கிரஸ், பாமக மற்றும் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
நேற்று (மே.12) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட வந்தனர். அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்தனர். இதை மீறி ஜிப்மர் மருத்துவமனை உள்ளே நுழைய அவர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலின் உருவப்படம் மற்றும் உத்தரவு நகலை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு: மழைதான் காரணமாம்