பெங்களூரு: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி நேற்று(ஆகஸ்ட் 23) மாலை சுமார் 6 மணியளவில் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுவரை யாரும் தொட்டிடாத நிலவின் தென்துருவத்தில் இந்திய விண்கலம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்பட மொத்த நாடும் உற்சாகமாக கொண்டாடி வருகிறது.
பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று மாலையில் லேண்டர் தரையிறங்கும்போது, காணொளி வாயிலாக அதனை பார்வையிட்டார். லேண்டர் தரையிறங்கிய பிறகு விஞ்ஞானிகளுக்கு காணொளி வழியாக வாழ்த்துக் கூறினார். பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரிக்ஸ் மாநாடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி விரைவில் நாடு திரும்பவுள்ளார். அதனைத் தொடர்ந்து இஸ்ரோவுக்கு நேரில் சென்று, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூரு வர இருப்பதாக தெரிகிறது. அன்று மாலை 6 மணிக்கு பெங்களூரு வந்து, இரவு 7 மணியளவில் இஸ்ரோவுக்கு செல்கிறார், அங்கு சுமார் இரண்டு மணி நேரம் விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து கூற உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இஸ்ரோவுக்கு நேரில் சென்று விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக் கூறினார். இஸ்ரோ சென்ற டி.கே.சிவக்குமார், இஸ்ரோ தலைவர் சோமநாத், சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், உதவி திட்ட இயக்குனர் கல்பனா உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். விஞ்ஞானிகளுக்கு சால்வை அணிவித்தும், மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். சந்திரயான்3 திட்டமும், அதன் விஞ்ஞானிகளும் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவிட்டதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
இதையும் படிங்க: பிரக்யான் ரோவரின் அடுத்த நடவடிக்கை என்ன? விக்ரம் லேண்டர் என்னாகும்! முழுத் தகவல்!