சமஸ்திபூர்: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் நேற்றைய முன்தினம் (ஜுலை 25), மதுபானம் குடிக்க மனைவி 100 ரூபாய் தர மறுத்ததால், குடிபோதையில் தந்தை தனது மூன்று வயது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அன்று மாலை, பிகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தின் மொஹியுதீன் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட படையா கிராமத்தில் நடந்து உள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட குந்தன் சாஹ்னி அன்று மாலை, குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் 100 ரூபாய் கேட்டு உள்ளார். ஆனால், மனைவி பணம் தர மறுத்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த குந்தன் சாஹ்னி, மனைவி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் சாஹ்னி தனது மனைவியை கத்தியால் தாக்க முயன்றதால், இந்த விஷயம் வெளியில் தெரிய வந்ததாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கணவர் ஏதாவது செய்து விடுவார் என்ற பயத்தில், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மனைவி அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார். இந்த நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மூன்று வயது மகனைத் தாக்கிய சாஹ்னி, அவனது கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுவன், அப்பகுதி மக்களின் உதவியால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசு வேலை கிடைத்த பிறகு மனைவி, குழந்தையை விரட்டிய நபர்.. பீகாரில் நிகழ்ந்த சம்பவம்!
பின்னர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி உள்ள சமஸ்திபூர் நகரின் காவல் நிலைய உயர் அதிகாரி கௌரவ் பிரசாத், சடலம் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக சதர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு எதிராக தொடர்பு உடைய சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மொஹியுதீன் காவல் நிலைய அதிகாரி தெரிவித்து உள்ளார். மகனின் கழுத்தை அறுத்து விட்டு, தப்பி ஓடி உள்ள தந்தையை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: ரூ.11,000 தவணை செலுத்த ரத்த தானம் செய்ய வந்த பெண்ணால் பரபரப்பு