புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளும் மத்திய பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில், அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நேரடித் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மேலும் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் கரோனா கால விடுமுறையால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
தற்போது கரோனா சற்று குறைந்து வருவதால், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த மாணவர்கள், வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவிட்டுத்தேர்வை மட்டும் நேரடியாக வைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆறு அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி நுழைவுவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வழுதாவூர்சாலையில் உள்ள இந்திரா காந்தி கலைக்கல்லூரியைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு மத்தியப்பல்கலைக்கழகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து மாணவி பவித்ரா கூறும்போது, ”கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்திவிட்டு தற்போது நேரடித்தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு என்று அறிவித்துவிட்டு, அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நேரடித்தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று கூறினார்.
புதுச்சேரியில் ஆன்லைன்தேர்வு நடத்த மறுக்கும் மத்திய பல்கலைக்கழகத்திற்கு எதிராக, புதுச்சேரியில் உள்ள 6 அரசு கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச அளவில் சாதிக்கத் துடிப்புடன் வேலூர் வீராங்கனை: மனமுள்ளோர் உதவலாம்!