ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் மெர்ஜான்போரா பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் அப்பாவி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்த நிலையில், ஒருவர் காயமுற்று கிடப்பதை பார்த்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஃப் அகமது கான் என கண்டறியப்பட்டது. அவருக்கு வயது 45. மேலும், அவர் மீது மாலை சுமார் 5.25 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அரைமணிநேர இடைவெளியில், அதாவது மாலை 6.10 மணியளவில் அனந்த்நாக் மாவட்டத்தில் இதேபோன்று அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி காவலரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். காவலர் மீது நான்கு குண்டுகள் பாய்ந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். உயிரிழந்தவர் உதவி துணை காவல் ஆய்வாளர் முகமது அஷ்ரஃப் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: Verdict: 9 ஆண்டுகள் கழித்து வளர்ப்பு நாய்க்கு கிடைத்த நீதி!